பாகிஸ்தானின் ரிஸல்பூரில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி மைய அணிவகுப்பில் கலந்துகொண்ட அசிம் முனிர், ”இந்தியா எங்களின் பரம எதிரி. இந்தியா, சட்டவிரோதமாக காஷ்மீரைப் பிடித்துக் கொண்டிருக்கிறது” எனப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2019இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய சூழலைக் குறிப்பிட்டு அவ்வாறு பேசிய அவர், ”காஷ்மீருக்கு தொடர்ந்து தார்மீகரீதியாக, அரசியல் உயர்மட்டரீதியாக ஆதரவு அளிப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக உறவு முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தியாவிலும் பொதுத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஜம்மு - காஷ்மீரிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசிம் முனிர், இப்படிப் பேசியிருப்பது இரு நாடுகளின் உறவுகளுக்கு இடையே மீண்டும் சிக்கலை உருவாக்கி உள்ளது.