மருத்துவ உலகுக்கு குட் நியூஸ்.. ஒரு சொட்டு ரத்தம் போதும்.. 15 நிமிடத்தில் புற்றுநோயை கண்டறியலாம்!
சீனாவின் ஹாங்சோவில் உள்ள வெஸ்ட்லேக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரே ஒரு சொட்டு காய்ந்த ரத்தத்தில் இருந்து குடல், வயிறு மற்றும் கணையப் புற்றுநோய்களைக் கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளனர்.
மனிதனைக் கொல்லும் நோய்களில் ஒன்று புற்றுநோய். அது, எவ்வளவு சீக்கிரம் கண்டறியப்படுகிறதோ, அதைவைத்து எளிதாக உயிரைக் காப்பாற்ற முடியும். அந்த வகையில், புற்றுநோயைக் கண்டறிய பல வகைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில்தான் ஒரே ஒரு சொட்டு காய்ந்த ரத்தத்தைவைத்து புற்றுநோய்களைக் கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியிருப்பது உலகத்திற்கே வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஹாங்சோவில் உள்ள வெஸ்ட்லேக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒரே ஒரு சொட்டு காய்ந்த ரத்தத்தில் இருந்து குடல், வயிறு மற்றும் கணையப் புற்றுநோய்களைக் கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள் உருவாக்கி இருக்கும் கருவிகள் மூலம் ஒரு துளி ரத்தத்தில் புற்றுநோயை மிகத் துல்லியமாக, ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இது 3D Chip மற்றும் ஒளியைக் கையாளும் அதிநவீன லைட் சென்சார்களைப் பயன்படுத்திச் செயல்படுகிறது.
ரத்தத்தில் உள்ள மிக நுண்ணிய செல்லுலார் கூறுகளான 'வெசிகல்ஸ்' அளவை இது கணக்கிடுகிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு, வழக்கமான முறைகளைவிட 10,000 மடங்கு துல்லியமானதாகும். தவிர, 95% துல்லியத்தோடு இது புற்றுநோயைக் கண்டறிகிறது. அதுமட்டுமின்றி, வெறும் 15 நிமிடங்களில் இதன் முடிவுகளைப் பெற முடியும் என கூறப்படுகிறது.
விரைவில் இந்தப் புதிய கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா நடவடிக்கையில் இறங்கியுள்ளது..இந்த கருவி மருத்துவ உலகில் பெரும் புரட்சியாகக் கருதப்படுவதுடன், மருத்துவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

