கம்போடியாவில் அமலுக்குவரும் கட்டாய ராணுவ சேவை.. அடுத்த போரா?
கம்போடியாவின் அண்டை நாடானா தாய்லாந்து உடன் அந்நாட்டின் உறவு கடந்த மே மாதத்திலிருந்து மோசமடைந்து வருகிறது. நீண்ட காலமாக நிகழ்ந்து வந்த எல்லைத் தகராறு மே 28 அன்று சிறு மோதலுக்கு வழிவகுத்தது. இந்த மோதல் Emerald Triangle எனும் பகுதியில் நடந்தது. இந்த சர்ச்சைக்குரிய பகுதியில்தான் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் என்று மூன்று நாடுகள் சந்திக்கின்றன. இந்த துப்பாக்கி சூடு சண்டையில், காம்போடியா சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு இருநாடுகளுக்கும் இடையே நிலவி வந்த பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
இருநாட்டு உறவையும் இந்தத் தாக்குதல் மோசமாக்கியிருக்கும் நிலையில், தாய்லாந்திலிருந்து எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை கம்போடியா தடை செய்திருக்கிறது. இந்நிலையில்தான் கட்டாய ராணுவ சேவை தொடர்பாக கம்போடிய பிரதமர் ஹன் மானெட் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், “இந்த மோதலின் அத்தியாயம் நமக்கு ஒரு பாடம். மேலும் நமது இராணுவத்தை சீர்திருத்துவதற்கும், நமது இலக்குகளை மறுபரிசீலனை செய்யவும், மதிப்பிடவும், நிர்ணயிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். 2026 முதல், கட்டாய இராணுவ சேவையை செயல்படுத்தப்படும். இது உறுதியான முடிவாகும். இராணுவத்தை மேம்படுத்தவும், பணியாளர்களின் பற்றாக்குறையை நிரப்பவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நமது தேசிய பாதுகாப்பு, நமது இராணுவத்தை கட்டியெழுப்புதல், யாருடைய பிரதேசத்தையும் ஆக்கிரமிப்பதற்காக அல்ல, மாறாக நமது பிரதேசத்தைப் பாதுகாப்பதற்காக..” எனத் தெரிவித்திருக்கிறார்.
18 முதல் 30 வயதுக்குள் உள்ள ஒவ்வொரு குடிமகனும் 18 மாதங்கள் இராணுவத்தில் சேவை செய்ய வேண்டுமென்று கடந்த 2006 ஆண்டு அந்நாட்டில் சட்டமியற்றப்பட்டிருந்தது. தற்போது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த சட்டம் தொடர்பாகப் பேசிய பிரதமர் ஹன் மானெட் 18 மாத சேவைக் காலம் 24 மாதங்களாக நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கம்போடியா மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று. 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய பட்ஜெட் 9.32 பில்லியன் டாலர் என்றால், பாதுகாப்புக்காக மட்டும் அந்நாடு ஒதுக்கும் தொகை 739 மில்லியன் டாலர். தற்போது இந்த மோதல் அதிகரித்திருக்கும் நிலையில் கம்போடியாவின் பிரதமர், ராணுவத்திற்கான பட்ஜெட் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனால், தாய்லாந்தின் ராணுவ பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் கம்போடியாவின் பட்ஜெட் ஏறத்தாழ 10% என்பதாகத்தான் இருக்கிறது.
கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே அதிகரிக்கும் மோதல் தாய்லாந்தில் உள்நாட்டு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, தாய்லாந்து நீண்ட காலமாக 20 வயதை எட்டும் ஆண்களுக்கு கட்டாய இராணுவ சேவையை அமல்படுத்தி வருகிறது.