ஆட்டம் காணப்போகும் அமெரிக்கா.. ஓரங்கட்டப்படும் டாலர்? BRICS போட்ட Master Plan!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
உலக வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைப்பது குறித்து BRICS நாடுகளிடையே தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. குறிப்பாக, டாலருக்கு மாற்றாக புதிய பொதுவான நாணயத்தை உருவாக்க BRICS முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், டெல்லியில் நடைபெற்ற 18-வது BRICS உச்சி மாநாட்டில் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்குப் பதிலாக, உள்ளூர் நாணயங்களில் நிதியுதவி வழங்குவதை அதிகரிக்க New Development Bank என்று சொல்லப்படும் NDB-யை BRICS தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாநாட்டுக்கு முன்பு டாலரைச் சார்ந்திருப்பதை குறைப்பது குறித்து அதிகம் பேசப்பட்டாலும், முந்தைய மாநாடுகளைப் போலவே இம்முறையும் பொதுவான அல்லது ஒரே நாணயத்தை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்படவில்லை. BRICS மாநாட்டில் வெளியிடப்பட்ட தலைவர்கள் கூட்டறிக்கையில், அமெரிக்க டாலர் அல்லது அமெரிக்கா குறித்து நேரடியாக குறிப்பிடப்படவில்லை. முன்னதாக, உலக வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் டாலரின் நிலையைப் பாதிக்கும் எந்த முயற்சியையும் BRICS நாடுகள் மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதேநேரத்தில், டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை உருவாக்குவது BRICS-ல் இந்தியாவின் கொள்கை அல்ல என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், வளர்ந்து வரும் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு NDB மூலம் அதிக நிதியுதவி வழங்குவது குறித்து BRICS கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, அந்தந்த நாடுகளின் சொந்த நாணயங்களில் கடன் வழங்குவதை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, இந்தியாவில் ஓர் உள்கட்டமைப்பு திட்டத்துக்கு அமெரிக்க டாலரில் கடன் வாங்கினால், ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக குறையும்போது, கடனைத் திருப்பிச் செலுத்த இந்தியா அதிக ரூபாயைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், அதே கடன், ரூபாயில் வழங்கப்பட்டால், ரூபாய்-டாலர் மதிப்பு மாற்றத்தால் ஏற்படும் இந்தப் பாதிப்பு குறையும். இதனால், வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தால் ஏற்படும் அபாயத்தை நாடுகள் குறைக்க முடியும்.
மேலும், NDB-யின் நிதி ஆதாரங்களை பல்வேறு வழிகளில் அதிகரிக்கவும், புதிய உறுப்பு நாடுகளைச் சேர்க்கும் பணிகளை விரைவுபடுத்தவும் BRICS தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் BRICS நாடுகள் டாலரை முழுமையாக கைவிடப் போகின்றன என்று அர்த்தமில்லை. அதற்கு பதிலாக, வளர்ச்சித் திட்டங்களுக்கு டாலரில் கடன் வாங்குவதை குறைத்து, தங்களது சொந்த நாணயங்களிலேயே அதிகமாக கடன் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே BRICS-ன் நோக்கம். இதனால், டாலர் மதிப்பு உயரும்போது ஏற்படும் கூடுதல் கடன் சுமையையும் நாடுகள் குறைக்க முடியும் என கருதப்படுகிறது.

