“பிணைக்கைதிகளை விடுவித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்த பேச்சு” - ஜோ பைடன்

பிணைக்கைதிகளை விடுவித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து பேசப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்File image

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகள் தீர்வை அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைதியை ஏற்படுத்துவது அவசியம். பிரச்னைக்கு சுதந்திரமான இரு நாடுகள் என்ற தீர்வை ஒருபோதும் விட்டுக் கொடுக்க இயலாது.

இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் என இருதரப்பினரும் பாதுகாப்போடு அமைதியாக வாழ வேண்டியவர்கள். பிணைக்கைதிகளை முழுவதுமாக விடுவித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து விரிவாக விவாதிக்க முடியும்” என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் இருந்து மேலும் இரு பிணைக்கைதிகளை விடுவித்துள்ளனர். இதனை செஞ்சிலுவைச் சங்கம் உறுதி செய்துள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 200க்கும் அதிகமானவர்களில் ஏற்கெனவே இருவரை விடுவித்திருந்த ஹமாஸ், தற்போது மேலும் இருவரை விடுவித்துள்ளது. 

மருத்துவத் தேவையை கருத்தில் கொண்டு வயது முதிர்ந்த இருவரை விடுவித்துள்ளதாக ஹமாஸ் கூறியுள்ளது. நியூரிட் கூப்பர், யோகாவேட் லிப்ஷிட்ஸ் ஆகிய இருவர் விடுவிக்கப்பட்டுள்ளதை செஞ்சிலுவைச் சங்கம் உறுதி
செய்துள்ளது.

அவர்கள் ரஃபா எல்லையை சென்றடைந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் கதார் நாடுகளின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையினை அடுத்து இவ்விருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இதுவரை நான்கு பேர் ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதிபர் ஜோ பைடன்
“இரண்டாவது லெபனான் போர்; விளைவுகள் மோசமானதாக இருக்கும்” - எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்

பிணைக்கைதிகளை விடுவிக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நிறுத்தம் மற்றும் கூடுதல் உதவிப் பொருள்கள் ஆகிய நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பினர் முன்வைப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com