சீனாவுக்கு ஏற்கெனவே தெரியும்.. வெள்ளம் குறித்து நேபாளம் கேட்ட தகவல்.! மூடி மறைத்ததா சீனா?
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் பேரழிவு வெள்ளம் ஏற்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, இதுபோன்ற பேரிடர்களுக்கான அபாயம் குறித்து இரு நாடுகளின் அதிகாரிகள் காத்மாண்டுவில் ஆலோசனை நடத்தியுள்ளனர். கடந்த மே 27-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், வெள்ளம், வானிலை மற்றும் பனிப்பாறை தொடர்பான அபாயங்களை கண்காணித்து, அவற்றை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பனிப்பாறைகளால் உருவாகும் ஏரிகள் குறித்த பட்டியல் தயாரித்தல், பேரிடர் அபாயப் பகுதிகளை வரைபடமாக்குதல் உள்ளிட்ட கூட்டு நடவடிக்கைகளும் முன்மொழியப்பட்டன. எனினும், பனிப்பாறைகளின் நகர்வு மற்றும் நீர்மட்டம் குறித்த போதுமான தகவல்கள் சீனாவிடமிருந்து கிடைக்கவில்லை என இரண்டு நேபாள அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேரழிவு ஏற்படுவதற்கு 12 நாட்களுக்கு முன்பு, ஆகஸ்ட் 14 முதல் 19 வரை அப்பகுதியில் பருவமழை காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என சீனாவின் உலக வானிலை மையம் நேபாள அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரித்திருந்தது. நேபாளத்தின் பல பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் உள்ளிட்ட தொடர் பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், பனிச்சரிவு, நீர்மட்டம், நிலச்சரிவு போன்ற அபாயங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் கிடைக்கவில்லை என நேபாள அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு பதிலளித்த சீன தூதரகம், முக்கியமான தகவல்களை சீனா சரியான நேரத்தில் நேபாளத்துடன் பகிர்ந்ததாக தெரிவித்துள்ளது.
வெள்ளம் ஏற்பட்டபோது, எல்லைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் தரவுகளை அனுப்புவது தடைபட்டதால் நேபாள அதிகாரிகளுக்கு உடனடி தகவல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குறைந்தது நான்கு கண்காணிப்பு நிலையங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதையடுத்து, எதிர்கால பேரிடர்களைத் தடுக்க சீனாவுடன் புதிய தரவுப் பகிர்வு ஒப்பந்தத்தை உருவாக்க நேபாளம் திட்டமிட்டுள்ளது. மழைப்பொழிவு மற்றும் ஆற்றின் நீர்மட்டம் குறித்த தகவல்களை 10 நிமிடங்களுக்கு ஒருமுறை பெறுவதன் மூலம், மக்களை முன்கூட்டியே எச்சரித்து உயிர்களைக் காப்பதே நோக்கம் என நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

