சிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்!

சிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்!
சிறையில் இருந்து ஆசியா பீபி விடுதலை: பாக்.கில் இருந்து வெளியேற்றம்!

இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்திப் பேசியதாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ பெண் விடுவிக்கப்பட்டார்.

ஆசியா பீபி (47) என்ற கிறிஸ்தவ பெண், இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தில் அவர் மீது மத நிந்தனை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அவருக்கு 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை லாகூர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து ஆசியா பீபி, 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆசியா பீவியை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. விடுதலை செய்யப்பட்டு ஆசியா பீவி வெளியே வந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறப்பட்டது. அதனால், அவர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தரப்பில், மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை அவரை நாட்டை விட்டுச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு இயல்பு நிலை திரும்பியது.

இதனிடையே, ஆசியா பீபியின் கணவர் மற்றும் அவரது குழந்தைகள் யாருக்கும் தெரியாத இடத்தில் இருக்கின்றனர். ’என் மனைவியை விடுத லை செய்யாமல் தாமப்படுத்தப்படுவது, 5 குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என் மகள்கள் அழுது கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் இன்னும் தங்களுடைய தாயை பார்க்கவில்லை’ என்றார் ஆசியா பீபியின் கணவர் மணிஷ்.

பீபியின் கணவர் மணிஷ் தன் குடும்பத்தை பிரிட்டன் அல்லது அமெரிக்காவுக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தங்களுடைய குடும்பம் நாட்டை விட்டு வெளியேற உதவி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தீர்ப்பு வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ஆசியா பீபி சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தார். இந்நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதை அவரது வழக்கறிஞர் சைஃப் முலூக் தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்துக்கு அழைத்துச்செல்லப்படும் அவர், அங்கிருந்து வேறு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவர் எந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறார் என்பது தெரியவில்லை.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com