சோழர் வரலாற்றை பேசும் முக்கிய ஆவணம்.. செப்புப் பட்டயங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது நெதர்லாந்து!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு 6 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்ட அவர், இன்று நெதர்லாந்து சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தி ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்தியாவில் காலனித்துவ ஆட்சியின்போது, வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள், சிற்பங்கள், கலைநயமிக்க பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு கொள்ளையடித்து செல்லப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்தப் பயணத்தின் போது, சோழர் காலத்து வரலாற்றுச் சிறமிக்க ‘ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்’ நெதர்லாந்து அரசால் இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்செப்புப்பட்டயங்கள், முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் காலத்து நிர்வாக ஆவணங்களாகும். நாகப்பட்டினத்தில் இந்தோனேசிய மன்னரால் கட்டப்பட்ட சூடாமணி விஹாரை என்ற பௌத்த மடாலயத்திற்குச் சோழ மன்னர்கள் நிலக்கொடை அளித்ததை இவை விவரிக்கின்றன. நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் மூன்று நூற்றாண்டுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்ட, 30 கிலோ எடையுள்ள இந்த 24 செப்புப்பட்டயங்கள், சோழர்களின் கடல்சார் வணிகம், சமய நல்லிணக்கம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை அறிந்துகொள்ள உதவும் மிக முக்கிய வரலாற்றுச் சான்றுகள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது வரலாற்று ஆவணம்
இந்த செப்புப் பட்டயங்கள், தொடர்பாக வரலாற்று பேராசிரியர் மாரப்பன் பேசும்போது, 300 ஆண்டுகளுக்கு முன்பு நாகை பகுதியில் இருந்த செப்பேடுகள் தான் தற்போது நெதர்லாந்து நாட்டில் இருப்பதாக தெரிவித்தார். ஆங்கிலேயர்கள் மற்றும் ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவில் வணிகம் செய்து வந்த நேரத்தில் தான் இது கிடைக்கப் பெற்றதாகவும், சோழர்களின் ஆட்சி காலத்தில் இருந்த ஆனைமலை செப்பேடுகளின் விவரம் தான் தமிழ் மொழியில் இருக்கிறது என்றார். சோழர்கள் ஆட்சி நிர்வாகம், வரி போன்ற விவரங்கள் இந்த செப்பேடுகளில் இருக்கும் என்றும், இது வரலாற்று ஆவணம் என தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்திய தொல்லியல் துறை இந்திய நாட்டுக்கு கொண்டு வரும் நேரத்தில், டெல்லியில் பாதுகாப்பாக காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே அமெரிக்கா நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட கலைப் பொருட்கள் முறையாக பராமரிப்பு இல்லை எனத் தெரிவித்த அவர், தமிழக அரசும் இதற்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

