‘அந்தக் கட்சிகளிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றி..’ - விஜய்க்கு இயக்குநர் சேரன் பதிவு
முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளுடன் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1967க்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத தனி பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக தலைவரான விஜய்க்கு திரையுலகில் இருந்து வாழ்த்துகள் குவிகின்றன. எம்ஜிஆரின் முதல் தேர்தல் சாதனையையும் முறியடித்த விஜயை, முன் விமர்சித்ததற்கு வருந்திய இயக்குநர் சேரன், மக்கள் பழைய கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டதாகக் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்திருக்கும் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற எம்ஜிஆரின் (33.52%) சாதனையை முறியடித்து விஜய் சாதனை படைத்துள்ளார்.
திரைத்துறையிலிருந்து வந்து ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்திக்காட்டியிருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் தன்னுடைய வாழ்த்தை பகிர்ந்திருக்கும் இயக்குநர் சேரன், தேர்தலுக்கு முன் விஜயை விமர்சித்தத்தற்கு வருத்தத்தை பகிருந்துள்ளார்.
மக்களை காப்பாற்றியதற்கு நன்றி..
தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் சேரன், “சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்..
உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி.. அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை.
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

