நிதியுதவி முதல் விருந்து வரை.. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் அமெரிக்கா! ட்ரம்ப் நகர்த்தும் காய்!
ட்ரம்ப் மீண்டும் அதிபரான பின் பாகிஸ்தானுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைப்புகளின் நிதியுதவிகள் தடையின்றி கிடைப்பது, பாகிஸ்தானின் எண்ணெய் வளத்தை வெளிக்கொண்டு வர உதவுவோம் எனக்கூறியது உள்ளிட்டவை இதற்கு உதாரணமாக கூறப்படுகின்றன. இதற்கெல்லாம் சிகரமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிரை வெள்ளை மாளிகைக்கே அழைத்து விருந்து கொடுத்தது உலகின் கவனத்தை ஈர்த்தது. பாகிஸ்தானில் சீனா மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ள நிலையில் ட்ரம்ப்பின் நகர்வு கவனம் பெற்றது. இந்நிலையில் பிரபல எக்கானமிஸ்ட் பத்திரிகையில் அமெரிக்கா - பாகிஸ்தான் நெருக்கம் குறித்து விரிவான கட்டுரை வெளியாகியிருந்தது.
இந்த நெருக்கம் இந்தியாவை மட்டுமல்லாமல் சீனாவையும் மத்திய கிழக்கு அரசியலையும் பாதிக்கும் என அதில் கூறப்பட்டிருந்தது. சர்வதேச உறவுகள் குறித்த மையம் என்ற சீன அமைப்பின் நிபுணர் ஹு ஷிசெங் (Hu Shisheng) கூறுகையில், 'அமெரிக்காவின் நட்புக்காக சீனாவின் நெருங்கிய உறவை பாகிஸ்தான் ஒருபோதும் விட்டுவிடாது' எனத் தெரிவித்தார். அமெரிக்கா, பாகிஸ்தான் நட்பு குறித்த அதிர்வுகள் தற்காலிகமானதே என்றும் இது சீனா, பாகிஸ்தான் இடையிலான வலுவான அடித்தளம் கொண்ட உறவை அசைத்துவிடாது என்றும் தெற்காசிய பொருளாதார விவகாரங்களுக்கான மையத்தில் ஆராய்ச்சி நிபுணர் ஜெஸ்ஸி வாங் (Jesse Wang) கூறியுள்ளார்.