சீனாவிடமிருந்து அணு ஆயுதங்களை வாங்கும் பாகிஸ்தான்.. அமெரிக்கா எச்சரிக்கை!
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமைகோரி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுடனான போரை தொடர்ந்து தனது அணு ஆயுதத்திறனை சீனா உதவியுடன் பாகிஸ்தான் மேம்படுத்தி வருவதாக, அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. தங்களை முழுமையும் அழித்துவிடக்கூடிய எதிரியாக இந்தியாவை பாகிஸ்தான் கருதுவதாகவும் அமெரிக்க பாதுகாப்புக்கான உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களையும் தொழில்நுட்பங்களையும் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கி வருவதாகவும் ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வழியே இப்பொருட்கள் வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் மரபுசார்ந்த படைபலம் வலிமையாக இருப்பதால் அதை அணு ஆயுதங்கள் மூலமே எதிர்கொள்ள முடியும் என பாகிஸ்தான் கருதுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.