வருமானத்தை தரும் குவாதர் துறைமுகம்| நிராகரித்த IND.. சீனாவிடம் ஒப்படைத்த பாகி.. வரலாறு சொல்வது என்ன?
பலூசிஸ்தான் துறைமுகத்தை இந்தியா ஒருகாலத்தில் நிராகரித்த நிலையில், அது இன்று சீனாவின் கட்டுப்பாடுகளுக்குள் இருப்பது பேசுபொருளாகி வருகிறது. சீனாவால் இத்துறைமுகம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, உள்ளூர் பலூச் கிளர்ச்சிக் குழுக்களால் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். இந்தப் பலூசிஸ்தான் மாகாணம் அரை நூற்றாண்டாக விடுதலை கோரி போராட்டம் நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தை பாகிஸ்தான் அரசு, ராணுவம் மூலம் ஒடுக்கி வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். எனினும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பலூச் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. தங்கள் மாகாணத்தில் இயற்கை எரிவாயு, கனிம வளங்களை பாகிஸ்தான் அரசு அநியாயமாக சுரண்டுவதாக கூறி, கிளர்ச்சியை முன்னெடுத்துள்ள இந்த பலூச் விடுதலை ராணுவம், குறிப்பாக, சீனாவின் நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களை எதிர்த்து வருகிறது. அதாவது, பலூச் குழுக்களிடையே தங்கள் நிலம் பாகிஸ்தானால் அல்ல, மாறாக வெளிப்புற சக்திகளால், குறிப்பாக சீனாவால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதுதான் அவர்களின் கோபமாக உள்ளது. இதையடுத்தே முன்பு வீரியம் குறைந்த இயக்கமாக கருதப்பட்ட பலூச் விடுதலை ராணுவம், கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்த அமைப்பை அமெரிக்கா பயங்கரவாத குழுவாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில்கூட, பலூச் மாகாணத்தில் பல இடங்களில் தாக்குதல் நடத்திய இக்கிளர்ச்சிக் குழு, 200 பேரைச் சுட்டுக் கொன்றது.
இதற்கிடையே, பலூசிஸ்தான் துறைமுகத்தை இந்தியா ஒருகாலத்தில் நிராகரித்த நிலையில், அது இன்று சீனாவின் கட்டுப்பாடுகளுக்குள் இருப்பது பேசுபொருளாகி வருகிறது. பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய துறைமுகமாக உள்ளது, பலூசிஸ்தான் மாகாணத்தின் குவாதர். 2017ஆம் ஆண்டு, பாகிஸ்தான் அரசு குவாதர் துறைமுகத்தின் செயல்பாட்டை 40 ஆண்டு குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைத்தது. அந்த துறைமுகத்தை, ஓவர்சீஸ் போர்ட் ஹோல்டிங் கம்பெனி (COPHC)என்ற கம்பெனி குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில், அது துறைமுக செயல்பாடுகள், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வருவாய் மேலாண்மையைக் கவனித்து வருகிறது. இதன் துறைமுக வருவாயில் 91% சீன நிறுவனத்திற்கும், 9% மட்டுமே பாகிஸ்தானுக்குச் செல்வதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அதேநேரத்தில், சீனாவால் இத்துறைமுகம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, உள்ளூர் பலூச் கிளர்ச்சிக் குழுக்களால் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. உள்ளூர்வாசிகளின் நிலம் கையகப்படுத்துதல், குறைந்த வேலைவாய்ப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவை அவர்களின் காரணங்களாக இருக்கின்றன. இதனாலேயே அது, கிளர்ச்சியையும் கவலையையும் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், 1783 முதல், குவாதர் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஓமன் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. கலாட்டின் கான் மிர் நூரி நசீர் கான் பலோச்சால் இந்தப் பகுதி, மஸ்கட் சுல்தானுக்கு பரிசாக வழங்கப்பட்டது. 1948 இல் பலுசிஸ்தானின் மற்ற பகுதிகள் பாகிஸ்தானை நோக்கி நகர்ந்தபோதும், குவாதர் ஓமானிய ஆட்சியின் கீழ் இருந்தது. அதாவது, சுதந்திரத்திற்குப் பிறகும் குவாதர் உடனடியாக பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறவில்லை. பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1958இல் குவாதர் ஓமானில் இருந்து பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது.
அதன்பிறகே பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தெற்காசிய வரலாற்றின்படி, இது ஒருகாலத்தில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஓமன் சுல்தான் 1956ஆம் ஆண்டு பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு குவாதரை வழங்கியதாகவும், ஆனால், அதை அவர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தியா மறுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகே, இது பாகிஸ்தானுக்கு தாரைவார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான், சீனா அதை நிர்வகித்து வருகிறது. குவாதர், இன்று உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளதால், சீனாவுக்கு அதிகளவில் வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், அந்நாட்டிற்கு நீண்ட கடல் வழிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.

