\
iran women
iran women Reuters

6 லட்சம் பேர்.. கையில் AK-47.. வீதியில் இறங்கிய பெண்கள்! ஈரானில் திடீர் பரபரப்பு!

அமெரிக்கா–இஸ்ரேல் போர்ச் சூழலில், 6 லட்சம் தன்னார்வலர்களை ராணுவப் பயிற்சிக்கு ஈரான் அழைப்புவிடுத்துள்ளது. ஆயுதம் ஏந்திய பெண்களும் தெருவில் அணிவகுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியில், அமெரிக்கா–இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. டிரம்ப் மீது எதிர்ப்பு கோஷங்கள் எழுந்தன. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் உட்பட பல ராணுவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்களை ராணுவப் பயிற்சியில் இணைத்து, பாதுகாப்புத் தயார்நிலையை உயர்த்தும் முயற்சியாக இந்த பேரணி பார்க்கப்படுகிறது. சுமார் 3 லட்சம் பேர் இதில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் - மீரா

அமெரிக்கா–இஸ்ரேல் உடனான போர்ச் சூழல் நீடித்து வரும் நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஆயுதம் ஏந்திய பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றுள்ளது. ‘Janfada-ye Iran’ ‘ஈரானுக்காக தியாகம் செய்பவர்கள் என்ற பெயரில் நடைபெற்ற இந்த அரசாங்க ஆதரவு பேரணி, போர் தொடங்கிய பின்னர் நடைபெற்ற மிகப்பெரிய பேரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணியில் ராணுவ உடை அணிந்தவர்கள் ஈரான் கொடிகளை ஏந்தியபடி ஈரான் நகரின் முக்கிய சாலைகளில் அணிவகுத்துச் சென்றனர். அவர்களுடன் ஆயுதம் ஏந்திய பெண்களும் இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக, ஈரானின் IRGC அமைப்புடன் தொடர்புடைய பெண்கள் துப்பாக்கிகளுடன் காணப்பட்ட காட்சிகள் கவனம் பெற்றன. சிலர் டிரக்குகளில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரத் துப்பாக்கிகளுக்கு அருகிலும் பாதுகாப்புப் பணியில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த பேரணியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, பொதுமக்களை ராணுவப் பயிற்சியில் இணைப்பதாகும். ஈரான் அரசு ஊடகங்களின்படி, இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தன்னார்வ ராணுவப் பயிற்சியில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேல் அதிகமாகலாம் என்றும் ஈரானின் IRGC தளபதி ஜெனரல் ஹசன் ஹசன்சாதே தெரிவித்துள்ளார்.

இந்த தன்னார்வலர்களுக்கு அடிப்படை ராணுவ மற்றும் அவசரநிலைப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கும் IRGC மற்றும் அதன் தன்னார்வ துணை அமைப்பான Basij படைகளுக்கு கூடுதல் ஆதரவாக இந்த புதிய தன்னார்வப் படை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சில அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளில் 3.13 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.

பேரணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்பட்டன. சிலர் இரு நாடுகளின் கொடிகளை மிதித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

எங்கள் தாய்நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு ஈரானியர்கள் பயப்படவில்லை என்ற செய்தியை டிரம்புக்கு தெரிவிக்கவே இந்த பேரணியில் பங்கேற்றதாக பலர் தெரிவித்துள்ளனர்.

பேரணி ஈரானின் ராணுவத் திறனை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்புகள், இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன்களும் இடம்பெற்றன.

இதன் மூலம், போர்ச் சூழலில் ஈரான் தனது ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டுவதுடன், பொதுமக்கள் மட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் ராணுவத் தயார்நிலையை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

iran women
H-1B விசாவுக்கு ரூ.96 லட்சம் கட்டணம்.. ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. இந்தியர்களுக்கு அதிர்ச்சி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com