ஏமன் ராணுவத்தின் மீது தாக்குதல்.. குறைந்தது 30 பேர் பலி.. மீண்டும் ஆரம்பமாகும் உள்நாட்டுப் போர்.?
2014-ம் ஆண்டு ஏமனின் முன்னாள் அதிபர் அப்த்ரப்பூ மன்சூர் ஹாதி (Abdrabbuh Mansur Hadi) அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றியதுடன் அந்நாட்டின் தலைநகரான சனாவை (Sanaa) ஹவுதி கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. அன்றிலிருந்து, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி படைக்கு இடையே உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது.
எனினும், 2022-ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே அமலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்தச் சூழலில், ஹவுதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய இந்தத் தாக்குதல், ஏமனில் மீண்டும் உள்நாட்டுப் போரின் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
மாரிப் (Marib) மற்றும் ஹத்ரமவுத் (Hadramout) மாகாணங்களில் உள்ள அரசின் ராணுவ முகாம்கள் மீது ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கி மூலம் ஹவுதிப் படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும்,
இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் இதில், 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேசமயம், இந்தத் தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள ஹவுதி கிளர்ச்சிக் குழுவின் ராணுவ செய்தியாளர் யஹ்யா சரீ (Yahya Saree), ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய இந்தத் தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து செங்கடல் பகுதியில் கடற்படை முற்றுகையை ஹவுதி தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது.

