சாத்தூர் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து: மூதாட்டி பரிதாபமாக பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தூர் அருகிலுள்ள சடையம்பட்டி கிராமத்தில் முத்துகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் பலியான நிலையில் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
சாத்தூர் சடையம்பட்டி கிராமத்தில் முத்துகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான திரவியம் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றனர். தீப்பெட்டி இயந்திர தொழிற்சாலையில் தயார் செய்த தீக்குச்சிகளை வாங்கி வந்து தீப்பெட்டிகள் தாயரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட தீக்குச்சி மூட்டைகளை இறக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். புகை மண்டலம் குறைந்தபின்பு தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்த குறுகிய அறைக்குள் கிருஷ்ணம்மாள் (60) என்பவர் மூச்சுத்திணறி இறந்த நிலையில் கிடந்தார். அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த தீ விபத்தில் பார்வதி என்பவருக்கு கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.