![கோள்கள்](http://media.assettype.com/puthiyathalaimurai%2F2024-05%2F019dd54c-97ec-4d8e-81cf-4cafb43cfcf4%2F817857.jpg?rect=2%2C0%2C603%2C339&w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்த பிரபஞ்சம் விசித்திரமானது. எண்ணற்ற சூரிய குடும்பங்களும், நட்சத்திரக் கூட்டங்களும், விவரிக்க முடியாத மர்மங்களும் சூழ்ந்த இப்பிரபஞ்சம், விஞ்ஞானிகளை தினமும் திகைக்க வைத்து ஆச்சர்யத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. அப்படியொரு ஆச்சர்யம்தான் தற்போது மீண்டும் நிகழவுள்ளது. அது என்ன? பார்க்கலாம்...
நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அதனதன் சுற்றுப்பதையில் வெவ்வேறு கால அளவுகளில் சூரியனை சுற்றிவருகிறது. இந்த கோள்கள் அனைத்தும், ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொள்வது என்பது அரிதான ஒரு நிகழ்வு.
பொதுவாக நமது சூரிய குடும்பத்தில், சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஆண்டுதோறும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை கிரகணம் என்று கூறுகிறோம். அதேபோல் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வந்தால் அது கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வுதானே...?
இத்தகைய கொண்டாட்ட நாள் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி அதிகாலையில் வானில் நிகழ உள்ளது. அதாவது புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வர உள்ளன.
இதில் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதை தொலைநோக்கியின் உதவியுடன் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வானில் இது கிரகங்களின் அணிவகுப்பு என்று வர்ணிக்கப்படுகிறது.