“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்

“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்
“ சந்திரயான் 98 சதவீத வெற்றி என்னுடைய சொந்த கருத்தல்ல”- இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக தான் கூறியது தன் கருத்து அல்ல என்றும் அதற்கான குழு ஆராய்ந்து மதிப்பீடு செய்த கருத்து எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர். அதில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டரை நிலவில் தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2.1 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரனை நெருங்கிக்கொண்டிருந்த போது லேண்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், லேண்டர் விக்ரமின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது விஞ்ஞானிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் மார்பில் சாய்ந்தபடி இஸ்ரோ தலைவர் சிவன் அழுதது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றிருந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்து மூத்த விஞ்ஞானிகள் சிலர் கேள்வி எழுப்பினர். மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், “ஆழமான சுயபரிசோதனை செய்யாமல் கருத்து தெரிவிப்பது, உலகத்தின் முன்னாள் நம்மை நகைப்புக்கு உரியவர்கள் ஆக்கிவிடும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக தான் கூறியது தன் கருத்து அல்ல என்றும் அதற்கான குழு ஆராய்ந்து மதிப்பீடு செய்தது எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  “ விக்ரம் லேண்டர் தொடர்பு எப்படி துண்டிக்கப்பட்டது. அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது இந்த திட்டத்தின் அனைத்து கட்டங்களையும் அதாவது தொடக்கத்தில் இருந்து லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது வரை அனைத்தையும் ஆராய்ந்து, 98 சதவீதம் வெற்றி அடைந்திருப்பதாக முதற்கட்ட மதிப்பீடு செய்தது. அது என்னுடைய கருத்து மட்டும் அல்ல. இந்தக் குழு இதுதொடர்பான இறுதி அறிக்கையை விரைவில் திட்ட மேலாண்மை அலுவலகத்தில் தாக்கல் செய்யும்.

லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது குறித்து பிரதமரிடம் தெரிவித்தபோது அவர் எனக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது எனக்கு ஒரு பதற்றமான நிலை காணப்பட்டதால் அவர் என்ன சொன்னார் என்பதை என்னால் சரியாக ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆனால் அதான் உள்ளார்ந்த அர்த்தம், கவலை வேண்டாம். உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் ஒருநாளில் சரியாகி விடும் என்பதே ஆகும். மறுநாள் காலையில் அவர் என்னை கட்டிப்பிடித்தபோது மிகவும் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தேன்.

சூரியனுக்கு விண்கலத்தை அணுப்பும் ஆதித்யா எல்1 திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் செயல்படுத்தப்படும். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செயல்படுத்தப்படும்.” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com