நிதி ஆயோக் கூட்டம் | முதல்வர் ஸ்டாலின் - இபிஎஸ் இடையே முற்றும் வார்த்தைப் போர்!
கோடை வெயில் குறைந்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவுடன் இனிமேல் ஒட்டும் இல்லை. உறவும் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், அதிமுக, பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ளது என்று திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்திருந்ததாக தெரிவித்தார். ஆனால் அன்றிரவே அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இது கூட்டணிக்கான சந்திப்பு இல்லை. தமிழக மக்களின் நலனுக்கான சந்திப்பு என கூறியிருந்தார். அதன் பிறகு சென்னை வந்த அமித் ஷா அதிமுக உடனான தேர்தல் கூட்டணியை உறுதி செய்தார். இதையடுத்து அதிமுக தலைமை மேல் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், திமுக, அதிமுக இடையேயான கருத்து மோதல் வார்த்தைப் போராக மாறி அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்....
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் முதலமைச்சர்:
இந்த ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதலமைச்சர் ஸ்டாலின், இந்த ஆண்டு நடைபெறவுள்ள கூட்டத்தில், பங்கேற்பதற்காக நாளை மறுநாள் டெல்லி செல்கிறார்.
இந்நிலையில், தமிழக முதல்வரின் டெல்லி பயணம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது X தளபக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்...
முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே? ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? திரு. @mkstalin அவர்களே- அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே:
அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எது ஸ்டாலினின் கை? அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.
மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!
ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை! ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை. அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை. தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!
மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!
7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்! அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை! கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!
உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது:
இதற்கெல்லாம் பின்னர் வருவோம்... நான் கேட்ட கேள்வி என்ன? #யார்_அந்த_தம்பி ? உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்? டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது. உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன்- #யார்_அந்த_தம்பி?
இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்:
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை வெளிப்படுத்தவே, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அடித்து சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறி வெள்ளைக்கொடி ஏந்த சென்ற பழனிசாமி, என்னை பார்த்து வெள்ளைக்கொடி ஏந்தியதாக பேச நா கூசவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி நிதிக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளதை குறிப்பிட்டு, இன்றைக்குக் கூட தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் எனக் கூறியுள்ள முதல்வர், கொள்கையில் உறுதியாக நிற்பேன். தமிழ்நாட்டிற்கான நிதியை போராடி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரெய்டை பார்த்து யாருக்கு பயம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்:
"மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் @mkstalin> தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்... இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு! #யார்_அந்த_தம்பி