ஆட்சியைப் பிடித்த விஜய்.. தவெகவின் வெற்றி ரகசியம் என்ன.. வெளியாகும் தகவல்!
தமிழக வெற்றித் கழகத்தின் தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் வகுக்கப்பட்ட விதம் குறித்துப் பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது எப்படி, அக்கட்சி கையாண்ட யுக்தி என்ன என்பது தொடர்பான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அதன்படி, இந்த வெற்றிக்கு விஜயின் சினிமா பிரபலம் மட்டுமின்றி, வார் ரூமும் பெரிதும் உதவியிருக்கிறது. ஆதவ் அர்ஜுனாவுக்குச் சொந்தமான ‘வாய்ஸ்ஆஃப் காமன்ஸ்' அலுவலகத்தில்தான் தவெகவின் வார்ரூம் இயங்கியுள்ளது. அங்கு கபில் சாகு தலைமையிலான 40 பேர் கொண்ட இளம் ஆய்வாளர்கள் குழு தேர்தல் உத்திகளை வகுத்துள்ளது. இந்த வார் ரூமில் பணியாற்றியவர்கள் அனைவரும் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான். இவர்கள் 234 தொகுதிகளிலும் களமிறங்கி, திராவிடக் கட்சிகளின் உட்கட்சிப் பூசல்கள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர்.
அதிருப்தியாளர்களைக் கண்டறிந்து, அவர்களை தவெக வேட்பாளர் தேர்வுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தவெகவின் சமூக ஊடகப் பிரசாரங்களை மட்டுமின்றி, விஜயின் உரைகளையும் ஜான் ஆரோக்கியசாமி தலைமையிலான குழுவே வடிவமைத்திருக்கிறது. விஜயின் வாகன பரப்புரையை ஜெகதீஷ் பழனிசாமி தலைமையிலான குழு கையாண்டுள்ளது. விஜய் பொதுவெளியில் குறைவாகத் தோன்றவேண்டும் என்பது அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான் என்கிறார்கள். கரூர் சம்பவத்துக்குப் பிறகு, விஜய் அதிகம் வெளியே வராதது எதிர்த்தரப்பினர் அவரை குறைத்து மதிப்பிட உதவியதாகத் தெரிகிறது. கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும், நிச்சயம் தவெக ஆட்சி அமைக்கும் என்பதில் விஜய், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் உறுதியாக இருந்துள்ளனர். அப்படியே நடந்திருக்கிறது.

