எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? ... விஜய்!
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அரங்கேறிய காவல் மரணங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிக் கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் இன்று மயிலாப்பூர் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. தவெகவினர் 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கருப்பு சட்டை அணிந்து 'சாரி வேண்டாம், நீதி வேண்டும்' என்ற பதாகையை கைகளில் ஏந்தியபடி கலந்து கொண்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பேசிய தவெக தலைவர் விஜய், வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், இப்போ Sorry மா மாடல் சர்காராக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், இதில் பேசிய அவர் திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்து கொள்கிறீர்கள்?
அதில், “ திருப்புவனம், மடப்புறம் அஜித்குமார், சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர்; அந்த குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, CM சார்... நீங்கள் Sorry கூறினீர்கள். அது தவறில்லை. ஆனால், இதே ஆட்சியில 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்கள். இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்கள். சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டிருப்பதற்கு பெயர் என்னங்க சார்? இப்போதும் அதே சிபிஐ-தானே? ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்து கொள்கிறீர்கள்?
அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரிக்க, 'நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும்' என்று தவெக வலுவாக கோரிக்கை வைத்திருப்பதால், பயத்தில் ஒன்றிய ஆட்சிக்குப் பின்னாடி ஒளிந்து கொள்கிறீர்கள்.
எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் என்றால், நீங்க எதுக்கு சார்?
அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கிறது. நீதிமன்றம்தான் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? CM பதவி எதுக்கு சார்? அதிகபட்சம் உங்களிடத்திலிருந்து வருவது , 'சாரி மா, நடக்கக்கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே... இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், இப்போ Sorry மா மாடல் சர்காராக மாறிவிட்டது. ஆட்சியை விட்டு போவதற்கு முன், நீங்க செய்த எல்லா தவறுகளுக்கும் பரிகாரமா சட்டம் ஒழுங்கை நீங்களே சரிசெஞ்சாகணும். இல்லன்னா, மக்களோடு மக்களா நின்று உங்கள சரி செய்ய வைப்போம் தவெக சார்பில் அதற்கு உண்டான போராட்டங்கள் அனைத்தும் எடுத்து நடத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.