பாஜக பெயரை சொன்ன விஜய்.. ஜனநாயகன் குறித்தும் அதிரடி கருத்து.. திருச்சியில் வெடித்த TVK தலைவர்.!
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், கேஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என குற்றம்சாட்டி, ஸ்டாலின் டெல்லி செல்லாததை கேள்வி எழுப்பினார். ஜனநாயகன் படத்தை தடை செய்தது தேர்தலைப் பாதிக்கக் கூடிய சூழ்ச்சி எனவும், திமுக, பாஜக இரண்டையும் நம்ப வேண்டாம், ஒரே ஒரு வாய்ப்பு தமக்குக் கொடுக்குமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு அரசியல் பெரும்பாலும் திமுக, அதிமுக என இரு துருவ அரசியலாகவே இருந்த நிலையில், தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அரசியல் போக்கையே மாற்றியமைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் நேரடியாக களம் காண்கிறார். இதற்காக சில நாட்களுக்கு முன்னர் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததோடு, அங்கு தனது முதற்கட்ட பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கேஸ் பிரச்னை எல்லாம் சரி ஆகிடுச்சா? டீ கடை, ஹோட்டல்கள் எல்லாம் மூடிட்டாங்க. கேஸ் தட்டுபாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்று கூறி அதிர வைத்தார். தொடர்ந்து ஸ்டாலின் சார் வீட்டில பிரச்னைன்னா டெல்லி போய்விட்டு வருவாரு. கேஸ் பிரச்னைக்காக டெல்லி போய்விட்டு வரலாம்ல என்றும் விமர்சித்தார்.
பின்னர் ஜனநாயகன் திரைப்பட விவகாரம் குறித்து பேசிய விஜய், கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சினு நிறைய பேர் சொல்றாங்க... அது மாதிரி ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பதும் ஒரு கூட்டு சூழ்ச்சி என கூறினார்.
மேலும், இந்தத் தேர்தல்ல ஜனநாயகன் படம் மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என பயந்து சூழ்ச்சி பண்ணிட்டாங்க என்று கூறிய அவர், திமுகவையும் நம்பாதீங்க, பாஜகவையும் நம்பாதீங்க. யூஸ்லெஸ் அரசு இது. ஒரே ஒரு வாய்ப்பு எனக்கு கொடுங்க என்றும் கூறினார். நீண்ட நாட்களாக அவர் பாஜக பற்றி பேசாத நிலையில், இந்த கூட்டத்தில் பாஜகவை தொட்டு சென்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதே போல, திமுகவை பாதி கதர் கூட்டணி என்றும் அதிமுகவை கொல்லைப்புற கள்ள கூட்டணி மற்றும் பாதி காவி கூட்டணி என்றும் அவர் விமர்சித்துள்ளார். பின்னர் இறுதியாக தொண்டர்கள் குஷி படுத்த தவெகவின் பிரச்சார பாடலை பாடி தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

