வாணியம்பாடி: கேடாய் முடிந்த கூடா நட்பு - 17 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராகவன், இவரது மகன் நரசிம்மன் (17) கடந்த 5 ஆம் தேதி நெக்குந்தி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சிறுவனின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக சிறுவனின் தந்தை ஜெயராகவன் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கொலை செய்யப்பட்டதாக வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை:
இந்நிலையில், சிறுவனின் உடல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிறுவனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து சிறுவன் கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான காவல்துறையினர் சிறுவன் நரசிம்மனை கொலை செய்தவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
காவல்துறையினர் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்:
சிறுவன் நரசிம்மன் கடைசியாக கடந்த 4 ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹ்மான் (17) என்ற சிறுவனிடம் பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது, இதைத் தொடர்ந்து அப்துல் ரஹ்மானை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுவன் நரசிம்மன் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு, பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுப்படும் நபர்களுடன் தொடர்பில் இருந்ததோடு, மணல் கொள்ளையில் ஈடுப்பட்டும் வந்துள்ளார்,
முன்விரோதம் காரணமாக கொலை செய்ய திட்டம்:
இதையடுத்து இராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், நரசிம்மனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நரசிம்மன், பிரவீனை தாக்கியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் அம்பலூர் பகுதியைச் சேர்ந்த அசோக் (24) சின்னகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (24) பெரியப்பேட்டை, சவுக்குதோப்பு பகுதியைச் சேர்ந்த சிவா (18) செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்த சத்யா (20) ஆகியோருடன் சேர்ந்து நரசிம்மனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்,
சிறுவனை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது:
இதைத் தொடர்த்து கடந்த 4 ஆம் தேதி இரவு நரசிம்மனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அப்துல் ரஹ்மான், நரசிம்மனை வாணியம்பாடிக்கு அருகே அழைத்துச் சென்றுள்ளார், அப்போது அங்கிருந்த பிரவீன், சத்யா, சிவா, சீனிவாசன், அசோக் ஆகியோர் நரசிம்மனை சரமாரியாக தாக்கி கழுத்தை நெறித்துள்ளனர், அதனை தொடர்ந்து நெக்குந்தி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நரசிம்மனின் உடலை வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச ;சென்றதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது,
உடனடியாக அப்துல் ரஹ்மான், அசோக், சீனிவாசன், சிவா, சத்யா ஆகியோரை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான பிரவீன், ஆந்திராவில் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து ரயில்வே காவல்துறையினர் ஆந்திரா சென்று அவரை தேடி வருகின்றனர்.