“ஓணத்திற்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்” - வானதி சீனிவாசன்
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மகளிர் அணி கோவை மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ வீட்டு வளாகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது....

“அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள். கோவை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் எல்லை மாவட்டம் என்பதோடு அதிகமான மலையாள மொழி பேசும் சமுதாய மக்கள் இங்கு இருக்கிறார்கள். சகோதர சகோதரிகளுக்கும் (சேட்டன்கள், சேச்சிகளுக்கு வாழ்த்து) எங்களுடைய திருவோண நல்வாழ்த்துகள்.
தமிழக முதல்வர்கூட ஓணம் திருநாளில் மலையாளத்தில் வாழ்த்து சொல்லியிருக்கிறார். வரவேற்கின்றோம்.
ஆனால், தீபாவளிக்கு இதுபோல முதல்வர் வாழ்த்து கூறினால் அனைவருக்குமான முதல்வராகவும் செயல்படுகிறார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும். ஓணம் மாவலி சக்கரவர்த்தியின் கதை.
தீபாவளிக்கும் ஒரு புராணக்கதை இருக்கிறது. ஓணத்திற்கு வாழ்த்து சொல்லும் நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் எங்களுடைய எதிர்பார்ப்பு, இந்த தீபாவளிக்காவது அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேஷன் ஷோ மற்றும் நடன நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்த வேண்டும். நெசவாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஃபேஷன் ஷோ ஆறு வருடமாக செய்து வருகிறோம். இந்த நடன நிகழ்ச்சி அனைத்து பெண்களும் கொண்டாட கூடிய நடனம். ஓணம் பண்டிகையையொட்டி இதில் கலந்து கொள்கிறோம். இதற்கும் சினிமாவிற்கும் முடிச்சு போடுகிறீர்கள்... அதற்கு வாய்ப்பில்லை” என்றார்.
பின் கோவை திமுக மேயர் பற்றிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “அது ஒரு அதிகாரம் வாய்ந்த பொறுப்பு. மேயர் என்பவர் அரசியல் அதிகார முதன்மையான நபர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற புகார் தெரிவிப்பது என்பது மாநில அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பொதுமக்களை மிரட்டுவது - சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கின்ற விஷயம். கோவை மேயர் விஷயத்தில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. யார் யாருக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கிறதோ, யாருக்கு எதிராக சாட்சியங்கள் இருக்கின்றதோ.. அதை வைத்துதான் அதன் அடிப்படையில்தான் மத்திய அரசு ஏஜென்சிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த கட்சி இந்த கட்சி என்ற பாகுபாடு பிஜேபிக்கு இல்லை. அவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இதனை எடுத்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.