மதுரை எய்ம்ஸில் 47% பணிகள் நிறைவு.. மத்திய அரசு விளக்கம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் 47 % நிறைவடைந்தது. 2026 அக்டோபர் மாதம் திட்டம் முடிவடையும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2021.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன், பிரதான் மந்திரி ஸ்வஸ்தைய சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெறுகின்றன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 47% நிறைவடைந்து விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் 2019 ஜனவரி 27-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 2021.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவமனையாக எய்ம்ஸ் மருத்துவமனை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி உதவியுடன் கட்டப்பட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த கதிர் ஆனந்த், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் காலதாமதம் குறித்தும் எப்போது இத்திட்டம் முடிக்கப்படும் எனவும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் யாதவ், பிரதான் மந்திரி ஸ்வஸ்தைய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 2021.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இத்திட்டத்திற்கு இதுவரை மத்திய சுகாதார அமைச்சகம் 471.02 கோடி ரூபாயை விடுவித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 47% நிறைவடைந்து விட்டதாகவும், திட்டம் விரைவில் நிறைவடையும் எனவும் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட காலம் 2026 அக்டோபர் மாதம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டப் பணிகள் சமூகமாக நிறைவடைவதை ஆய்வு செய்வதற்காக தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.
