’அதீத வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கும்..’ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
2050க்குள் சராசரி வெப்பநிலை 27.8 டிகிரியைத் தாண்டும் நிலையில், மக்கள் நடப்பது, உடற்பயிற்சி செய்வது குறைந்து, ஒவ்வொரு மாதமும் உடல் உழைப்பின்மை 1.85% அதிகரிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் இந்தியாவில் ஒரு லட்சம் மக்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது அதிச்சி தகவல்.
'தி லான்செட் குளோபல் ஹெல்த்' (The Lancet Global Health) இதழில் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு, 2050ஆம் ஆண்டிற்குள் உயர்ந்து வரும் வெப்பநிலையின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் உடல்ரீதியாகக் குறைவான செயல்பாடுகளையே மேற்கொள்வர் என்று எச்சரிக்கிறது . மேலும், இந்தியாவைப் போன்ற ஏற்கனவே கடும் வெப்பம் நிலவும் நாடுகளில் இதன் தாக்கம் இன்னும் மோசமாக இருக்கக்கூடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது .
அந்த அறிக்கையில் 2050ஆம் ஆண்டுக்குள் அதிகரித்துவரும் வெப்பம் காரணமாக, ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் பேர் அகால மரணத்தைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் சுமார் 368 கோடி டாலர் உற்பத்தி இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெப்பம் அதிகரிக்கும்போது மக்கள் உடற்பயிற்சி செய்வதையும், நடப்பதையும் தவிர்ப்பார்கள். இதனால் இரண்டாயிரத்து 30ஆம் ஆண்டுக்குள் உடல் உழைப்பின்மையை 15 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்கு எட்டப்படாமல் போகும் அபாயம் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 2050ஆம் ஆண்டில் போதிய உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், ஒரு லட்சம் மக்கள்தொகையில் சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம். வெப்ப மண்டல நாடுகளில், சராசரி வெப்பநிலை 27 புள்ளி 8 டிகிரி செல்சியஸைத் தாண்டும். ஒவ்வொரு மாதமும், உடல் உழைப்பின்மை 1 புள்ளி எட்டு ஐந்து சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனைத் தடுக்க, உடற்பயிற்சி வழிகாட்டுதல்களில் வெப்ப அபாய எச்சரிக்கைகளைச் சேர்க்கவும், நிழல் நிறைந்த நடைபாதைகளை உருவாக்கவும், வெப்பப் பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உடல் உழைப்பின்மையை ஒரு தனிப்பட்ட விருப்பமாகப் பார்க்காமல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

