“அண்ணாவே விஜய்யை பார்த்துதான் கட்சி ஆரம்பித்தார்..” - கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலின்!
சேலத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசினார். தமிழ்நாடு தான் தனது வீடு எனவும், 8 கோடி மக்கள் தான் தனது குடும்பம் எனவும் கூறினார். தனிக்கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்கி காட்ட சவால் விட்டார். உதயநிதி ஸ்டாலின், 'அண்ணாவே விஜய்யை பார்த்து கட்சி ஆரம்பித்தார்' என கிண்டல் செய்தார்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய், “ஹே விஜய் வீட்டைவிட்டு வெளிய வா.. பனையூரை விட்டு வெளிய வா என்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என்பது தெரியுமா? என்னைப் பொறுத்தவரை தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடிபேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம் என் உறவு; என் சொந்தம்” என பேசினார்.
மேலும் எதிர்கட்சியினருக்கு சவால் விட்ட விஜய், ”அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு சவால்.. என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு அவர்களுக்கு இருக்கிறதா? திராணி இருக்கிறதா?” என பேசியிருந்தார்.
விஜயை கிண்டல் செய்த உதயநிதி..
இந்நிலையில் விஜய் நேற்று பேசியது குறித்தும், விஜய் பங்கேற்கும் கூட்டத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்தும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “உயிரிழப்பு ஏற்படுவது குறித்து நீங்கள் யாரிடம் கேட்கவேண்டும்? என்னிடமா கேட்கவேண்டும்” என பதிலளித்தார். மேலும் தனிக்கட்சி ஆரம்பித்தது குறித்து பேசியதற்கு பதிலளித்த அவர், “அண்ணாவே அவரை பார்த்து தான் கட்சி ஆரம்பித்தார் தெரியுமா” என கிண்டல் செய்தார்.

