அதிகரித்த சாலை விபத்து மரணங்கள்.. 2வது இடத்தில் தமிழகம்! திமுக அரசை விமர்சித்த ஆர்.பி உதயகுமார்.!
தமிழ்நாட்டில் நடந்து வரும் சாலை விபத்துகளை சுட்டிக் காட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழகத்தில் ஸ்டாலின் திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கருப்பு புள்ளிகள் ஏற்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். தற்போது, நம்முடைய கவலையெல்லாம் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சாலைகள் தோறும் ரத்தக் கரைகள் படிந்து இருப்பதை நாம் என்னவென்று கடந்து செல்வது என்று புரியவில்லை.
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் மட்டும் நடைபெற்ற சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் நமக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி அருகே கடந்த நவம்பர் 24-ஆம் தேதி இரு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்து 70-க்கும் மேற்பட்டோர்கள் காயமடைந்தனர். அதனையடுத்து, சிவகங்கை நடந்த சாலை விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில், 40 மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
திமுக ஆட்சியில் கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, போதை பொருள் புழக்கம் இவையெல்லாம் தொடர்ந்து நடந்து வந்தாலும், தற்போது அதனுடன், நாள் தவறாமல் சாலை விபத்துகள் நிகழ்வதும் மனித உயிர்கள் பலியாவதும் நமக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த உயிரிழப்புகள் மூலம் அந்த குடும்பத்தினர் அடையும் துயரத்தையும், உயிரிழந்தவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தாரின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாவதையும் என்னவென்று சொல்வது.
தமிழகத்தில், கடந்த 11 மாதங்களிலே மட்டும் நடந்திருக்கும் சாலை விபத்துகளின் பட்டியலை பார்த்தால் நமக்கு தலை சுற்றுகிறது. ராணிப்பேட்டை அருகே கடந்த ஜனவரி-9 ஆம் தேதி கர்நாடகா அரசு பேருந்து மீது இரு லாரிகள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அரசு பேருந்து மோதியதில் காரில் வந்த 4 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மே மாதம் 4-ஆம் தேதி கேரளத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த வேன் மீது அரசு பேருந்து மோதியதில் 4-பேர் உயிரிழந்தனர். திருத்தணி அருகே மே மாதம் 7-ஆம் தேதி அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 4பேர் உயிரிழந்தார்கள் மேலும் 32 பேருக்கு காயம் ஏற்பட்டது. கரூர் மாவட்டத்தில் கடந்த மே 17ஆம் தேதி ஆம்னி பேருந்து சுற்றுலா வேனும் மோதியதில் 4 பேர் உயிரிழந்து 15 பேர்கள் காயமடைந்தனர். இவையெல்லாம், திமுக ஆட்சியில் இந்தாண்டு நிகழ்ந்த மோசமான சாலை விபத்துகளாகும்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்தசாலை விபத்துகளில் 13.7 சதவீதத்துடன் 7,041 பேர் உயிரிழந்துஉத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 10.4 சதவீதத்துடன் 6,258 பேர் உயிரிழந்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனாலும், சாலை விபத்து குறித்து முதலமைச்சர் அக்கறை செலுத்தவில்லை. விளம்பரத்திற்கு அக்கறை செலுத்த முதலமைச்சர் 10 சதவீதமாவது மக்கள் உயிரைக் காக்க அக்கறை செலுத்த வேண்டாமா? நேரம் ஒதுக்க வேண்டாமா?
ஸ்டாலின் அவர்களே உங்களின் எதிர்காலம் பற்றி, தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதை பற்றி நீங்கள் தொடர்ந்து உங்கள் கட்சிக்காரர்களுக்கு உத்தரவிடுகிறீர்கள். மக்களிடத்திலே வேண்டுகோள் விடுகிறார்கள். மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களுடைய உயிர் பறிபோவதை கண்டு உங்களுக்கு பரிதாபம் ஏற்படவில்லையா? கவலையில்லையா?
நீங்கள் 7-ஆம் தேதி மதுரைக்கு வருகீர்கள் அதற்காக சாலைகளிலே பன்னீரை தெளித்து உங்களை வரவேற்பதற்கு கட்சி தயாராகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகிறது. ஆனால், இந்த மதுரையில் உள்ள சாலைகளில் சாக்கடைதண்ணீர் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மதுரை மக்கள் மீது அக்கறை இருந்தால் விளம்பரத்துக்காக நடத்தப்படும் விழாக்களுக்கு நீங்கள் நேரம் ஒதுக்குறீர்களே? அதில், ஒரு மணி நேரம் ஒதுக்கி மதுரையில் இருக்கிற சாலைகளை ஆய்வு செய்ய முன் வருவீர்களா?
எப்போதும் போல விளம்பர வெளிச்சத்திலே கருப்பு, சிவப்பு கொடியை பறக்க விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்..! ஆனால், இங்கே ரத்தக்கரைப்படைந்த சாலைகளாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவுரை எழுதுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நீங்கள் அக்கறை உள்ள முதலமைச்சரா? அல்லது விளம்பரம் தேடும் முதலமைச்சரா?என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

