“நெஞ்சைப் பதற வைக்கிறது..” திருவண்ணாமலை துயரச் சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வேதனை!
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயலால், கடந்த 3 மூன்று நாட்களாக பரவலாக பலத்த காற்றுடன் கூடிய அதிக கனமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது.
ஆரம்பத்தில் புயல் வருமா? வராதா? என்ற குழப்பங்கள் நீடித்த நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பலமான மழைப்பொழிவை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. இதனால் விழுப்புரம் முதலிய பல மாவட்டங்களில் நூறு ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு மழை பொழிவு ஏற்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து வீதிக்கு வரவழைத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பது மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 பேரின் உயிரிழப்பை தொடர்ந்து அவர்களுடைய குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட துயரச்சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் வேதனை தெரிவித்ததோடு, தமிழக அரசுக்கு கோரிக்கையையும் வைத்துள்ளார்.
மீட்பு படைகளை தயார்நிலையில் வைத்திருப்பது அவசியம்..
திருவண்ணாமலை துயரச் சம்பவம் குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் விஜய், “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.