பொன்ராஜ் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்.. டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று விஜய் புகார்!
தவெக தலைவர் விஜய், பெண்களை தரக்குறைவாக பேசிய பொன்ராஜ் வெள்ளைச்சாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் நேரில் சென்று புகார் அளித்துள்ளார். பொன்ராஜ், பெண்களை தரக்குறைவாக விமர்சித்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விஜய், பெண்களின் கண்ணியத்தை காக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக விஜயின் ரசிகைகளும், தவெக பெண் தொண்டர்களுமான சிலர் வெளிப்படுத்திய கருத்தை, மோசமாக சித்தரித்து விபச்சாரிகள் என கடுமையாக விமர்சித்திருந்தார் அரசியல் விமர்சகரான பொன்ராஜ் வெள்ளைச்சாமி. இவர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு ஆதரவாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவெளியில் தெரிவித்த ஒரு கருத்திற்கு பெண்களை விபச்சாரிகள் என விமர்சித்த பொன்ராஜுக்கு சமூகவலைதளத்தில் அதிகப்படியான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கேட்க மறுத்த பொன்ராஜ், அவர்களை அப்படி சொல்லாமல் பிறகெப்படி சொல்ல முடியும் என்றும் தெரிவித்தது பேசுபொருளாக மாறியது.
இந்தசூழலில் தவெக தலைவர் விஜய் உட்பட தவெக நிர்வாகிகளும் பொன்ராஜுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், விஜய் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை நேரில் சந்தித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை வேண்டும்.. விஜய் புகார்!
டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்ற தவெக தலைவர் விஜய் ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) மகேஸ்வர் தயாள் அவர்களை சந்தித்து தமிழக பெண்களை தரக்குறைவாக பேசிவரும் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவை அளித்தார். விஜயுடன் செங்கோட்டையும் டிஜிபி அலுவலகம் சென்றிருந்தார்.
விஜய் அளித்த மனுவில், “ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் திரு.பொன்ராஜ் என்கிற நபர் தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா. அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் திரு.பொன்ராஜ் என்கிற இந்த நபர் ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.
இவ்வாறு நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

