"உங்கமேல தப்பு இல்லை" - பாதிக்கப்பட்டவர்கள் விஜயிடம் தெரிவித்தது என்ன? அருண்ராஜ் பகிர்ந்த தகவல்
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்ததாக அக்கட்சியினர் தெரிவித்திருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இன்றுவரை அது பேசுபொருளாகவே இருந்துவருகிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சமும், காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்ட போதும், தவெக தலைவர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் தவெக தலைவர் விஜய் கடந்த 2 நாட்களாக வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமும் அவர் பேசியதாகவும், இந்த வீடியோ காலின்போது, பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்துள்ளனர்.
இதுதொடர்பாக கரூரில் பேசிய அருண்ராஜ், ”கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் எங்கள் கட்சித் தலைவர் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ’சார்.. உங்கமேல தப்பு இல்லை. நீங்க தைரியமா இருக்கணும். நீங்க சொன்ன வார்த்தை எங்களுக்கு ஆறுதலா இருக்கு. அதனால, நீங்களும் தைரியமாக இருங்க. இதை விட்றாதீங்க. தொடர்ந்து போராடுங்க. நாங்க எப்போது உங்ககூட இருப்போம்’ என்று அவருக்கு ஆறுதல் கூறினர்.
எல்லா மக்களும் இதைத்தான் சொன்னார்கள். பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து விரைவில் விஜய் சந்திக்க உள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.