ஈரோடு கிழக்கில் போட்டியா? தமிழக வெற்றிக் கழகத்தின் முடிவு என்ன?
2021 சட்டமன்ற தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வென்றிருந்தார். அடுத்த சில வருடங்களில், உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்தார். சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, மீண்டும் இடைத்தேர்தலை கண்டுள்ளது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி.
இப்படி நான்கு ஆண்டுகளில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 முறையும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், இம்முறை திமுக நேரடியாக களமிறங்குகிறது. திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராக இருக்கும் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேநேரம், அதிமுக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
போட்டியும் இல்லை.. ஆதரவும் இல்லை..
தமிழக வெற்றிக் கழகத்தின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது தவெகவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத்தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றிய இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.