திருச்சி | இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்து - 2 இளைஞர்கள் உயிரிழப்பு
செய்தியாளர்: லெனின்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன் என்பவரும், திருச்சி முத்தரசநல்லூர் பகுதியைச் சேர்ந்த நந்தா என்ற வெற்றிவேல் ஆகிய இருவரும் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் டைட்டில் பார்க் கட்டுமான வேலையில் ஈடுபட்டு வந்தனர். நண்பர்களான இவர்கள் இரண்டு பேரும் இன்று திருச்சியில் இருந்து பணியிடத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது எடமலைப்பட்டி புதூர் புதிய சோதனைச் சாவடி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகன், நந்தா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார், இரு உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழப்புக்கு காரணமான கார் எது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.