திருநங்கைகள் மசோதா | ”திணிப்பதற்கான நேரமல்ல” - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!
திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளின் உரிமைகள் தொடர்பான மசோதா மக்களவையில் நேற்று கடும் எதிர்ப்புக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா திருநங்கைகளுக்கான இடஒதுக்கீடு, அடையாள அட்டை வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் செய்வது மற்றும் அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான தண்டனையை அதிகரிப்பது ஆகியவற்றைநோக்கமாகக் கொண்டுள்ளது. அதேநேரம், இந்த மசோதா திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளின் உண்மையான தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றும், இது ஒரு 'கண் துடைப்பு' நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் வீரேந்திர குமார், இந்த மசோதா வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும், திருநங்கைகள், திருநம்பிகளின் கண்ணியமான வாழ்வை, மசோதா உறுதிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, மசோதா மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியிருக்கிறது.
இந்த சூழலில் தான், ஒரு குறிப்பிட்ட சமூகத்துகாக உருவாக்கப்பட்ட சட்டத்தை அந்த சமூகமே எதிர்க்கும் போது நாம் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது என மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019- ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவுள்ள மக்களின் குரலைக் கேட்காமல் முன்னெடுக்க முடியாது.
பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வரப்படும் ஒரு சட்டத்தையே அந்த சமூகமே எதிர்த்து வருமானால், அது திணிப்புக்கு பதிலாக சிந்தனைக்கான தேவையை உருவாக்குகிறது.
மத்திய பாஜக அரசு அவசரப்படாமல், திருநங்கை சமூகத்தினருடன் கலந்துரையாடி, உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

