கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓராண்டிற்கு முன்பு புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு அனைத்து பிரிவுகளும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், மகப்பேறு பிரிவு மட்டும் பழைய கட்டிடத்திலே இன்னும் இயங்கி வருகிறது. இங்கு தினமும் 30 முதல் 40 வரை பிரசவங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், பழைய கட்டிடத்தில் இருக்கும் பிரசவ வார்டில் மூன்று கழிவறைகள் மட்டுமே உள்ளதாகவும், அதில் ஒரு கழிவறையில் மட்டுமே தண்ணீர் வசதி உள்ளதாகவும் கர்ப்பிணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பயன்பாட்டில் இருக்கும் அந்த ஒரு கழிவறை கூட மிகவும் மோசமாக சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கர்ப்பிணிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு கேட்டப்போது பொதுப்பணித்துறை சார்பில் கழிவறை சீரமைக்கும் பணிக்கான டெண்டர் நாளை விடப்பட உள்ளதாகவும் மாத இறுதிக்குள் புது கழிவறை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.