சமீபத்தில் செந்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறுவறுக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்ததோடு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கொங்கு மண்டல வழக்கு மொழியில் பேசியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது ஓ வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், ”அண்மையில் பாஜக தலைவர் திரு. @annamalai_k ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, “ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை. உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும் தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது.
அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை. எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்” என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.