“ஒரு மாவட்டம் என்றில்லை.. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே மிகக்கடுமையான நாள்!” - பிரதீப் ஜான்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதுக்குறித்தான எச்சரிக்கைகளை தனியார் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொடைக்கானலுக்கு இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், யாரும் சுற்றுலா சென்றுவிட வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மழைக்குறித்தான மற்றொரு பதிவில், “சந்தேகத்திற்கு இடமின்றி, நீண்ட காலமாக தமிழகத்திற்கு பருவமழை மிகக் கடுமையான நாள் நேற்றுதான். கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. ஒரு மாவட்டத்தை குறிப்பிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.
மாஞ்சோலையில் - 500 மிமீ,
மயிலாடுதுறை - கடலூரில் 300 மி.மீ.,
தூத்துக்குடி, கோவில்பட்டியில் - 350+ மி.மீ
பதிவாகியுள்ளன. இதேபோல குற்றாலம் வரலாற்று சிறப்புமிக்க மழைப்பொழிவை கண்டுள்ளது. பெரம்பலூர்-அரியலூர் இடையேவும் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
KTCC மற்றும் ராணிப்பேட்டை வெள்ளத்தில் மிதக்கிறது, அதாவது நந்தியாற்றில் அதிக அளவு நீர் வெளியேறி, பூண்டி அணைக்கு 13,000 கனஅடி நீர் வரத்து உள்ளது.
ஆயிக்குடி மற்றும் தென்காசி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் வடகிழக்குப் பருவமழை மோசமாக பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று துளிக்கூட மழை பெய்யாது.” என்று தெரிவித்துள்ளார்.