நாளையுடன் முடிகிறது பரப்புரை.. 6 மணி முதல் அமலாகும் விதிமுறைகள்! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியிட்டது. அதன்படி தமிழத்தில், ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்கனவே களத்தில் இருந்த சூழலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அரசியல் கட்சிகளின் பரப்புரைகள், தலைவர்களின் சாலை வலம், வாக்கு சேகரிப்பு என தேர்தல் திருவிழா களைகட்டி வரும் சூழலில், தேர்தல் கொண்டாட்டங்கள் நிறைவு கட்டத்தை எட்டியிருக்கின்றன. நாளை மாலை 6 மணியுடன் எந்த வகையான பரப்புரையும் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 21.4.2026 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.
அதன்படி, தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் உள்ளிட்ட நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
மேலும், தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 21.4.2026 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 21.4.2026 அன்று மாலை 6.00 மணி முதல் செயலற்றதாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

