ரூ.100 கோடி சொத்தை குறைத்துக் காண்பித்தாரா விஜய்..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 3 நாட்களே இருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜயின் தமிழகம் வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கிறது. அக்கட்சி சார்பில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமார் முழுமையாக வேட்புமனுவை பூர்த்தி செய்யப்படாததால், அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருந்தது. இதையடுத்து, தவெக 233 தொகுதிகளில் நேரிடையாக போட்டியிடுகிறது.
அதேசமயம், தவெக எனும் புதிய வரவால் ஏற்கனவே, இத்தேர்தலுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தெரிவித்ததும் இத்தேர்தலில் மற்றுமொரு பேசுபொருளாகியிருந்தது. அதன்படி, வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான மார்ச் 30 அன்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய், ஏப்ரல் 2-ம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் மனு தாக்கல் செய்தார்.
தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்தே, அவரின் வேட்புமனு மீது பல்வேறு விவாதங்கள் எழத் தொடங்கின. குறிப்பாக, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்தக் குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதுமட்டுமன்றி, இரண்டு வேட்புமனுக்களிலும் குறிப்பிடப்பட்டிருந்த விஜய்யின் வயதும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததாகத் தகவல் வெளியானது. இது அரசியல்களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தான், வேட்புமனுவை திருத்தம் செய்யக்கோரி பல்வேறு மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் விஜய் சார்பில் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது.
இந்தசூழலில் தான், தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன எனவும், சொத்துக்கணக்கை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும் எனவும் பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஜய் இரண்டு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்துள்ளது முறைகேடானது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

