முறிந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி.. தவெக ஆட்சியமைக்க ஆதரவு - கிரிஷ் சோடங்கர் அறிவிப்பு!
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்தசூழலில் தான், ஆட்சியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் தவெக, திமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. அந்தவகையில் தான், ஏற்கனவே காங்கிரஸின் ஆதரவை தவெக கோரியிருந்த நிலையில், இன்று திமுக மற்றும் இடது சாரிகளிடம் ஆதரவு கோரி தவெக தரப்பில் இருந்து கடிதம் அனுப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 28 இடங்களில் போட்டியிட்ட 5 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம், தவெகவின் ஆதரவு 113 ஆக உயர்கிறது. இந்த நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 6 இடங்களே தேவை என்ற நிலை உருவாகியிருக்கிறது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்திருப்பதன் மூலம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்திருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பை எதிர்க்கும், மதவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தவெக - காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் குழு பனையூர் தவெக தலைமை அலுவலகம் செல்லவுள்ள நிலையில், அங்கு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.
