மாணவர்களைச் சீண்டிய அறிக்கை..? கொந்தளித்த தமிழகம்.. பணிந்த அரசு!
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
ஜல்லிக்கட்டு தொடங்கி, நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் வரை இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு அளப்பரியது. சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களுக்கும் வித்திட்டது மாணவர்கள் அமைப்புதான். இந்நிலையில், தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை ரீதியான தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை உடனடியாக கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை தற்போது மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும், நாளை தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் மாணவர் அமைப்புகள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டங்கள் என்பது ஜனநாயகத்தின் ஓர் அங்கம்தான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால், போராட்டங்கள் நடத்த உரிமை உண்டு. இந்த அறிவிப்பு ஜனநாயக உரிமையை முடக்கும் செயல்.
இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பிக்க தலைமைச் செயலாளருக்கும் சரி, கல்லூரிக் கல்வி இயக்குநரகத்திற்கும் சரி, எந்தவொரு அதிகாரமும் இல்லை. இந்நிலையில், இந்த உத்தரவு எப்படி பிறப்பிக்கப்பட்டது? இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மாணவர்களைக் கண்டு ஏன் இந்த அரசு அஞ்சுகிறது என்று தெரியவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். தமிழகம் முழுவதும் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

