திருவாரூர்: ஓடும் ரயிலில் பெண் பேராசிரியரின் பையை பறித்துச் சென்ற மர்ம நபர்!
செய்தியாளர்: மாதவன்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் சுதா. இவர், திருச்சியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திருவாரூரில் இருந்து அகஸ்தியம் பள்ளி செல்லும் ரயிலில் சுதா பயணித்துள்ளார். அப்போது மணலி என்கிற இடத்தில் ரயிலில் அமர்ந்திருந்த சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த செயினை மர்ம நபர் ஒருவர் அறுக்க முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக சுதா சத்தம் போட்டதை அடுத்து செயினை விட்டு விட்டு சுதாவிடம் இருந்த ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பியோடி விட்டார். சுதா தன் ஹேண்ட் பேக்கில் 25 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாகவும் மற்றும் ஆதார், பேன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகள் இருந்ததாகவும் ரயில்வே காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
ஓடும் ரயிலில் பேராசிரியரிடம் ஹேண்ட் பேக்கை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது.