திருப்பரங்குன்றம் | "வழக்கத்தில் இல்லை" Vs "சமூகப் பிரச்னையா மாறுமா?” - நீதிமன்றத்தில் காரசார வாதம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை சிஐஎஸ்எஃப் வீரர்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியிலேயே நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை. இதனையடுத்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் நேற்று மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, நேற்றிரவே தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து சிஐஎஸ்எஃப் வீரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியது - அரசு தரப்பு
அப்போது, அரசு தரப்பில் இருந்து வாதிட்ட வழக்கறிஞர் ரவீந்திரன், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பேரி கார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியது எனத் தெரிவித்தார்.
100 ஆண்டுகளுக்கு மேல் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதில்லை - அரசு தரப்பு
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோவிலைவிட பழமையானதா தீபத்தூண் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "திருப்பரங்குன்றத்தில் பழமையான தூண் உள்ளது. ஆனால், அது கோயிலைவிட பழமையானதா என தெரியவில்லை” என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், 2 இடங்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவது மத நம்பிக்கையை புண்படுத்தும்.100 ஆண்டுகளுக்கு மேல் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதில்லை. 1862 முதல் வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டி உத்தரவிட தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
தீபம் ஏற்றுவது எவ்வாறு சமூகப் பிரச்சனையை உருவாக்கும் - நீதிபதிகள்
இதையடுத்து இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆண்டிற்கு ஒருமுறை சில மணி நேரம் தீபம் ஏற்றுவது எவ்வாறு சமூகப் பிரச்சனையை உருவாக்கும் மற்றும் பதட்டமான சூழலை உருவாக்கும்? என்றும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட சூழலில் எந்தவிதமான ஏற்பாடும் செய்யாமல் கோவில் நிர்வாகம் இருந்துள்ளது. எனவே, தனி நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளார்? உத்தரவு நடைமுறைப்படுத்துவதற்காக சில மாற்று உத்தரவுகளை வழங்கி உள்ளார்.
மத நல்லிணக்கம் என்பது ஒருவரை ஒன்று செய்ய விடாமல் தடுப்பதில் அல்ல. இரு தரப்பும் இணைந்து, தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும் செய்ய அனுமதிப்பதிலும் தான் உள்ளது எனவும் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் இன்றே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நேற்று நடந்தது என்ன?
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியில் நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை. இதனையடுத்து, தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து முன்னேறி சென்றபோது காவல்துறையினருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சிங்கா, மதுரை மாநகர் காவல் ஆணையாளர் லோகநாதன், மதுரை எஸ் பி அரவிந்த், சிவகங்கை எஸ் பி சிவப்பிரசாத் மினி ஸ்டோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் பகுதியில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்களுடன் தீபத்தூணிற்கு சென்று தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பிற்காக 67 CISF படையினர் மலைப்பாதை பகுதிக்கு வருகை தந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் CISF படையினர் மலை மேல் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நிர்வாக நீதிபதியிடம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு முறையீடு செய்யப்பட்டதால், நாளை காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக பாதுகாப்பு பணிக்காக வந்த CISF படையினர் மீண்டும் திரும்பிச் சென்றனர்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் பகுதியில் பாஜக நிர்வாகி சூர்யா தலைமையில் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செல்வதற்காக சென்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது 30க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் மலை மீது சென்றதால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கீழே அழைத்துச் சென்றனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பாஜகவினரின் போராட்டம் காரணமாக 16 கால் மண்டபத்திற்கு முன்பாக நடைபெறும் சொக்கப்பனை நிகழ்விற்கு சுவாமி உலா வருகை சிறிதுநேரம் தாமதமானது. பின்னர், 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் சொக்கப்பனை நிகழ்வு முடிவடைந்து தாமதமான நிலையில், சுவாமி வீதி உலா ரத வீதி வழியாக செல்லாமல் சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலுக்கு சென்றடைந்தது.

