தூத்துக்குடி: மூட்டை தூக்கும் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை
செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே சூசை நகரைச் சேர்ந்தவர் தேம்பாவணி (50). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு இவரது மகன்கள் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தேம்பாவணியின் மனைவி தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு ராஜபாளையத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். தேம்பாவணியும் தனியாக வசித்து வந்துள்ளாார்.
இந்நிலையில் இன்று காலை முத்தையாபுரம் துறைமுகச் சாலையில் சண்முகபுரம் அருகே முகம் மற்றும் தலையில் வெட்டப்பட்ட நிலையில், தேம்பாவணி சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர துணை காவல் கண்காணிப்பாளர் மதன், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார், தேம்பாவணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மது போதையில் உடன் இருந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் தேம்பாவணி கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.