தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இழப்பீடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இழப்பீடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: இழப்பீடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 கோடி வழங்கக்கோரிய வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கக்கோரி ராஜ்குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் 10 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கக்கோரி விஜயகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கையை முன்வைத்தும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சந்திரசேகர் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த மே 18-ஆம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com