திருவள்ளூர் | வேதபாராயணம் செய்ய வந்த 3 மாணவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம்
செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை சேலையூரில் உள்ள வேத பாடசாலையில் பயின்று வரும் மாணவர்கள் பிரமோற்சவ விழாவுக்காக வேதபாராயணம் செய்ய வந்திருந்தனர். அப்போது, கோயில் குளத்தின் படிக்கட்டு அருகே அமர்ந்து சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த போது 3 பேர் நீரில் தவறி விழுந்துள்ளனர்.
இதையடுத்து கரையில் இருந்த மற்றொருவர் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து ஹரஹரன் (16), வெங்கடராமன் (17), வீரராகவன் (24) ஆகிய 3 பேரையும் நீரில் இருந்து மீட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.