“எப்படியெல்லாம் அடித்தார்கள் என்பது அவர்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்” இளம்பெண்ணின் ஆடியோ!

"என்னை நன்றாக வைத்திருப்பதுபோல காட்டிக்கொள்ளத்தான் அப்படி எல்லாம் செய்தார்கள். என்னை எப்படியெல்லாம் அடித்தார்கள் என்று எனக்கும் அவர்களுக்கும்தான் தெரியும். ஆனால், குடும்பத்திற்குள்ளேயே, அடிக்கவே இல்லை என்று நடிப்பார்கள்"
பாதிக்கப்பட்ட இளம்பெண்
பாதிக்கப்பட்ட இளம்பெண்புதியதலைமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவர் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் 12-ம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகாவை, பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளனர்.

ஆண்டோ மற்றும் மெர்லினா
ஆண்டோ மற்றும் மெர்லினாpt web

ரேகா 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால், அவரை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாக உறுதியளித்ததாகத் தெரிகிறது. கடந்து ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட ரேகாவை, தனது குழந்தை அழும்போதெல்லாம், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினாவும் சேர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ரேகாவை சிகரெட் கொண்டு ஆண்டோ மதிவாணன் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினரின் மருமகள், ரேகாவின் தலை முடியை வெட்டி அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இளம்பெண் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், 3 தனிப்படைகள் அமைத்து எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா
ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா

இதற்கிடையே, ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த ஆண்டோ மதிவாணன், பணிப்பெண்ணாக இல்லாமல் தங்கள் வீட்டு மகளாக அவரை நடத்தியதாகவும், கேக் வெட்டி கொண்டாடியதாகவும் சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், சிசிடிவி ஆதாரங்கள் என எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் கூறுவது அனைத்தும் மற்றவர்களை நம்ப வைக்கும் நாடகம் என்று துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்
“சீக்கிரம் வாங்க சார்... என் லைஃப் முடிஞ்சுது...” - கடைசியாக காவல்துறையிடம் உதவிகோரிய செய்தியாளர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், ”என்னை அடித்தது எல்லாமே உண்மைதான். ஆனால், என்னை சந்தோஷமாக வைத்திருந்தது போல காட்டுவதற்காக, அனைவரது முன்பும் எதாவது வாங்கி கொடுப்பார்கள். பின்பு அடிப்பார்கள், வாங்கி கொடுத்த பொருட்களை திரும்ப வாங்கிக்கொள்வார்கள். எனக்கு கேக் வெட்டியது எல்லாம் உண்மைதான்.

அப்போதுதான் அவர்கள் குடும்பத்தில் அனைவரும் நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள் என்று நினைப்பார்கள் என்ற கோணத்தில்தான் கேக் வெட்டினார்கள். ஊருக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்புகூட அடித்தார்கள், பிறகு நல்லவிதமாக பேசுவதுபோல அனுப்பிவைத்தார்கள். வீட்டுக்கு போய் சந்தோஷமாக இருந்துவிட்டு வந்துவிடு என்று கூறினார்கள். பொருட்கள் வாங்கி கொடுத்தது, எல்லாம் என்னை சமாதானம் செய்யத்தான்.

என்னை நன்றாக வைத்திருப்பதுபோல காட்டிக்கொள்ளத்தான் அப்படி எல்லாம் செய்தார்கள். என்னை எப்படியெல்லாம் அடித்தார்கள் என்று எனக்கும் அவர்களுக்கும்தான் தெரியும். ஆனால், குடும்பத்திற்குள்ளேயே, அடிக்கவே இல்லை என்று நடிப்பார்கள். அடித்தது அனைத்தையும் மறைக்கவே வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகிறார்கள். அக்கா உன்னை அடிக்கிறேன் என்று கஷ்டப்படாதே, கோவப்படாதே என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், நான் வீட்டுக்கு வரும்போது துணியை கொடுக்காமல் அனுப்பினார்கள். நீ மறுபடியும் வரவேண்டும் என்று கட்டாயப்படுத்திதான் அனுப்பினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, புகார் கூறிய இளம்பெண்ணுக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நேரில் வருமாறு போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். இதற்காக அவர் நேரில் வருவதாக கூறிய நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை தொடங்கியது. பரிசோதனைக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்
"என்னை மன்னித்து விடுங்கள்" - திடீரென மாணவர்கள் காலில் விழுந்த எம்.எல்.ஏ; நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com