தேனி மாவட்டம் சின்னமனூர் கருங்காட்டன்குளம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மனைவி லதா (52). இவர் சின்னமனூர் அருகே ஐயம்பட்டியில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இப்பள்ளியில் யோகா பயிற்சி வகுப்பு சம்பந்தமாக விளம்பரம் செய்வதற்கு கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த சின்னகந்தன் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (38) சென்றுள்ளார். அப்போது அவர், ஆசிரியை லதாவுடன் அறிமுகமாகி உள்ளார்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கராத்தே ராமகிருஷ்ணன் என அறியப்பட்ட திமுக பிரமுகரான இவர், தமிழ்நாடு கூடுதல் பாடத்திட்ட பயிற்சியாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர், கம்பம் வடக்கு நகர திமுக துணைச் செயலாளர் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார்.
இதையடுத்து தனக்கு அரசியல் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறி ஆசிரியை லதாவிடம், லதாவின் கணவர் மற்றும் அவரது தம்பிக்கு அரசு வேலையும், லதாவின் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட்டும் வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு தவணைகளில் 70 லட்சம் ரூபாயை ராமகிருஷ்ணன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கம்பம் நான்கு வழிச் சாலையில் உள்ள 63 சென்ட் நிலத்தை அதிக விலைக்கு விற்றுத் தருவதாகக் கூறி தனது பெயருக்கு ராமகிருஷ்ணன் பத்திரம் முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிறகு அந்த இடத்தை வேறு நபருக்கு பிளாட் போட்டு விற்பனை செய்ததோடு, ஆசிரியையின் வீட்டை தனியார் பைனான்ஸில் அடமானம் வைத்து 25 லட்சம் ரூபாய் கடனும் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை கேட்டபோது, ராமகிருஷ்ணன் பணத்தை திருப்பித் தராமல் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட லதா தேனி மாவட்ட எஸ்பி பிரவின் உமேஷ் டோங்கரேயிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து எஸ்பி உத்தரவின்படி திமுக பிரமுகர் ராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து தேனி சிறையில் அடைத்தனர்.