ஜெயலலிதாவின் வேதா இல்ல வழக்கில் இன்று தீர்ப்பு

ஜெயலலிதாவின் வேதா இல்ல வழக்கில் இன்று தீர்ப்பு
ஜெயலலிதாவின் வேதா இல்ல வழக்கில் இன்று தீர்ப்பு
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த அதிமுக ஆட்சியில் அவர் வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் தீபா மற்றும் தீபக் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் வீட்டுக்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்தது தவறு என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதேநேரத்தில், இல்லத்தை கையகப்படுத்தும் முன்பு அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் அப்போதைய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷேசசாயி, இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com