தென்காசி: பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சார்பு ஆய்வாளர் - பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து சஸ்பெண்ட்
செய்தியாளர்: சு சுந்தரமகேஷ்
தென்காசி மாவட்டம், வி.கே.புதூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார். இவர், வீராணம் என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து தெரிந்து கொண்ட அந்த ஊர் பொதுமக்கள், சார்பு ஆய்வாளரை மறித்து கேள்வி எழுப்பியதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால், கடந்த 2 தினங்களாக நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது சார்பு ஆய்வாளர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், சதீஷ்குமாருக்கு உறுதுணையாக இருந்த காவலர் கார்த்திக் என்பவரை செங்கோட்டை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.