கோயில் கடைகளை காலி செய்ய டிசம்பர் 31வரை அவகாசம்
கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய டிசம்பர் 31ஆம் தேதி அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து நெல்லையப்பர் கோயில், ஸ்ரீவில்விபுத்தூர் ஆண்டாள், திருச்சி ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கடை நடத்துபவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, கடைகளை காலி செய்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை முறையான நோட்டீஸ் அனுப்பவில்லை. உடனடியாக கடைகளை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. பழமையான கோவில்களின் பாதுகாப்பு கருதியும், பக்தர்களின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில்களில் பல ஆண்டுகளாக கடை நடத்தி வருபவர்களை உடனடியாக காலி செய்வது கடினம் என்பதால் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.